G7 நாடுகளின் அவசர ஆலோசனை: உலகப் பொருளாதாரத்தில் பதற்றம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு கட்டத்தில் 25% உயர்ந்து ஒரு பேரல் 119.50 டாலரை எட்டியது. பின்னர் இது 100 டாலராகக் குறைந்தது.
இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க G7 (Group of Seven) நாடுகளின் நிதி அமைச்சர்கள் இன்று (மார்ச் 9, 2026) அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, தங்கள் வசம் உள்ள அவசரகால எண்ணெய் இருப்புகளை (Strategic Oil Reserves) சந்தையில் வெளியிட G7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. சுமார் 300 முதல் 400 மில்லியன் பேரல் எண்ணெயை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட உலகளாவிய சந்தைகள் 3% முதல் 5% வரை சரிவைச் சந்தித்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடக்கும் எண்ணெய் போக்குவரத்து தடைபடும் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்கும் சந்தை வீழ்ச்சிக்கும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த எண்ணெய் வெளியீட்டுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமையுடன் (IEA) இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குறிப்பாக இன்று நடக்கும் இந்த தொலைபேசி வாயிலாகன ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள், நாளை உலக நாடுகளின் எரிபொருள் விலை மற்றும் பங்குச்சந்தை மாற்றங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெய்திகள் தெரிவிக்கின்றன.





