ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்தவுக்கு பிணை
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றில் விடயங்களைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு அவரது அமைச்சினால் எரிபொருள் கொடுப்பனவுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சட்டவிரோதமான முறையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் 28 இலட்சத்து 53 ஆயிரத்து 935 ரூபாயை எரிபொருள் கொடுப்பனவாக இந்தச் சந்தேகநபர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் மாதாந்தம் 50,000 ரூபா வீதம் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அந்தத் தொகை மாதம் 75,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டார்.
இதன் மூலம் ஊழல் எனும் குற்றத்தைச் புரிந்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கைக்குத் தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.
முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்
பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.





