மக்கள் சக்தி கட்சியை விட்டு விலகும் தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன்

தென்கொரியாவில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பழமைவாத மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகுவதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) பதிவிட்டுள்ளார்.
ஜூன் 3ஆம் திக திடீர் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு மக்கள் சக்தி கட்சியின் அதிபர் வேட்பாளரைவிட ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் லீ ஜே மியுங் முன்னிலை வகிக்கும் நிலையில் திரு யூன் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மே 15ஆம் திகதி வெளியிடப்பட்ட கேலப் கொரிய கருத்துக் கணிப்புப்படி கிட்டத்தட்ட 29% மக்கள் சக்தி கட்சி அதிபர் வேட்பாளர் கிம் மூன் சூவை ஆதரித்தனர். ஜனநாயகக் கட்சியின் லீக்கு 51% ஆதரவு கிடைத்தது.
டிசம்பரில் அதிரடியாக ராணுவச் சட்டத்தை அறிவித்த யூன், பின்னர் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெற கட்சி உறுப்பினர்கள் திரு யூனைக் கட்சியிலிருந்து விலகும்படி கூறினர்.
“சுதந்திர கொரியாவைப் பாதுகாக்கும் என் கடமையை நிறைவேற்ற மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகுகிறேன். தயவுசெய்து உங்கள் ஆதரவை கிம் மூன் சூவுக்குத் தாருங்கள்,” என்று யூன் பதிவிட்டார்.
அதிபர் வேட்பாளர்கள் லீக்கும் கிம்முக்கும் இடையிலான முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி மே 18ஆம் திகதி நடைபெறுகிறது