வெளியேற்றத்திற்கு பிறகு முதல் பொது உரையை நிகழ்த்திய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
2024ம் ஆண்டு வங்கதேசத்தை(Bangladesh) விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் தனது முதல் உரையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா(Sheikh Hasina), நோபல் பரிசு பெற்ற மற்றும் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்(Muhammad Yunus) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் சட்டவிரோத, வன்முறை ஆட்சியை நடத்துவதாகவும் நாட்டை பயங்கரவாதம் நோக்கி கொண்டு செல்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லியில்(Delhi) உள்ள வெளிநாட்டு நிருபர்களிடம் ஆடியோ செய்தி மூலம் பேசிய ஹசீனா, முழு தேசமும் ஒன்றுபட்டு இந்த மோசமான நேரத்தில் நமது மாபெரும் விடுதலைக்கு போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஹசீனாவின் அவாமி லீக்(Awami League) அரசாங்கத்தை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வங்கதேச புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், பிப்ரவரி 12ம் திகதி வங்கதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், கடந்த ஆண்டு மே மாதம் ஹசீனாவின் அவாமி லீக்கை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதை வங்கதேசத் தேர்தல் ஆணையம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.




