திருகோணமலையில் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி – பலரும் பங்கேற்பு!

இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிதியறிவுக் கண்காட்சி இன்று (22) இடம்பெற்றது.
இதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த கண்காட்சியானது கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கி திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கண்காட்சியில் வங்கிச் சேவைகள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை – முதலீட்டு வழிகாட்டல்கள், ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள், ஊழியர் நம்பிக்கை நிதிய சேவைகள், கொடுகடன் தகவல் பணியகத்தினுடைய சேவைகள் உள்ளிட்டவையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள், தொழில் முயற்சியாளர் சந்தை, நாணய அரும்பொருட் காட்சியகம் என்பனவும் இடம்பெற்றிருந்தன.
இதனை அரச அதிகாரிகள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர்.