பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்ய நிதி உதவி!
பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார்.
“பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, சமய நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
இந்நடவடிக்கைக்கு உதவி வழங்குதல் பொருத்தமானதென அரசு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வழிபாட்டு தலங்களை துப்பரவு செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்வதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி இதற்குரிய அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.




