அடுத்த 03 மாத உரக் கையிருப்பை பேண உர நிறுவனங்கள் இணக்கம்
அடுத்த 03 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன.
விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன்
இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்தன.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும்,
இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தைச் சந்தையில் தாராளமாகப் பேணுவது மற்றும் அதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளித்துள்ளதாகத்
தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிறுபோகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான
உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு ஏதுவாக, சந்தையில் போதுமான உரக் கையிருப்பைப் பேண
விவசாய அமைச்சும் தனியார் நிறுவனங்களும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார்.
எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதன்
அவசியத்தையும், அதில் அரசாங்கம், உர நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய மூன்று தரப்பினரதும் அர்ப்பணிப்புத் தேவை என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதற்காக நிறுவனப் பிரதிநிதிகள் வழங்கும் ஒத்துழைப்பையும் அவர் பாராட்டினார்.
இலங்கையின் உரக் கையிருப்பு நிலவரம் குறித்த முக்கிய தரவுகள் இதன்போது வெளிப்படுத்தப்பட்டன.
2026 சிறுபோகத்தில் 5 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
நெற்செய்கைக்கு 83,000 மெட்ரிக் தொன் மற்றும் ஏனைய பயிர்களுக்கு 42,000 மெட்ரிக் தொன் என மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் இம்முறை தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 1 ஆம் திகதி நிறுவனங்களிடம் 95,000 மெட்ரிக் தொன் மற்றும் விநியோகஸ்தர்களிடம் 7,000
மெட்ரிக் தொன் என 102,000 மெட்ரிக் தொன் யூரியா காணப்பட்டது.
கடந்த இரு வாரங்களில் 27,000 மெட்ரிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 17ஆம் திகதி நிலவரப்படி நிறுவனங்களிடம் 68,000 மெட்ரிக் தொன் மீதமுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11,000 மெட்ரிக் தொன் மாத்திரமே விற்பனையாகியிருந்தது.
ஆனால் உரத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உரத்தைச் சேகரித்ததால், இந்த மார்ச் மாதத்தில் இதுவரை 27,000 மெட்ரிக் தொன் விற்பனையாகியுள்ளது.
மேலதிகமாக 77,000 மெட்ரிக் தொன் யூரியா ஓடர் செய்யப்பட்டுள்ளது. இதில் 21,000 மெட்ரிக் தொன்
இந்த மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இலங்கையை வந்தடையும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு நகரை அண்மித்த களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்கான கடன் வசதிகளை
வழங்குதல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
நெல் மற்றும் மரக்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.





