அமெரிக்காவை தவிர்த்து ஆசியாவை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடும் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு வந்த சுற்றுலாப் பயணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக ஐரோப்பாவின் முன்னணி பயண நிறுவனமான TUI தெரிவித்துள்ளது.
அமெரிக்கா செல்வதற்கான தேவை பெருமளவு சரிந்துள்ளதாக TUI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.
இதற்குப் பதிலாக ஐரோப்பிய பயணிகள் தற்போது ஆசிய நாடுகள், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கரீபியன் தீவுகளை நோக்கித் தமது பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க எல்லைகளில் சுற்றுலாப் பயணிகள் தடுத்து வைக்கப்படுவதும், சமூக வலைதள ஆய்வு போன்ற கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதிலும், TUI நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 77.1 மில்லியன் யூரோக்கள் வரை லாபம் ஈட்டி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
குறிப்பாக, அந்நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் (Cruise) வணிகம் 70 சதவீதத்திற்கும் அதிகமான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஜமைக்காவில் ஏற்பட்ட ‘மெலிசா’ சூறாவளியால் ஹோட்டல் துறையில் பாதிப்புகள் ஏற்பட்ட போதும், ஒட்டுமொத்த வருவாய் 4.9 பில்லியன் யூரோக்களாக நிலைபெற்றுள்ளதாக TUI நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.





