EPF தொடர்பான ஊடக செய்திகள் தவறானவை – தொழில் அமைச்சகம் விளக்கம்
ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்த கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் சில ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வில், EPF மற்றும் ETF நிதிகளின் பங்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஓஷானி உமங்கா ஹப்புஆரச்சி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், EPF ஒரு சமூக பாதுகாப்பு நிதியாக செயல்படுகிறது என்றும், ETF வேறு நோக்கங்களுக்காக இயங்குகிறது என்றும் விளக்கினார்.
சில EPF உறுப்பினர்கள் இடைக்காலமாக நிதியைப் பெறுவதால், அதன் முழுமையான சமூக பாதுகாப்பு நோக்கம் நிறைவேறாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓய்வு பெற்ற பிறகு அரசு ஓய்வூதியத்தைப் போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், EPF ஓய்வூதியத் திட்டம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை என பிரதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவுடன் கலந்துரையாடிய பிறகே எந்த தீர்மானமும் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், EPF உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பின் வழக்கம்போல் தங்களது பணத்தைப் பெற முடியும் என்றும், தற்போதுள்ள கட்டண முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.





