இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார்.
இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
சமூகங்கள் விரைவில் நிலைபேறான தன்மைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம், நீர் வழங்கல், போக்குவரத்து இணைப்புகள், சுகாதார வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பது அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமைகளில் உள்ளடங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அபிவிருத்திக் கூட்டாளர்களின் உதவியுடன் விரிவான தேவைகளுக்கான மதிப்பீடு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களை வழிநடத்தும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நேரத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கக்கூடிய வலுவான ஆதரவானது, நாட்டை உல்லாசப்பயணத்தின் தளமாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காகவே என்று சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் வலியுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, அடிப்படைத்தளத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப பயண ஆலோசனைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதை ஊக்குவிக்குமாறு இராஜதந்திரச் சமூகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அமர்வில் கலந்து கொண்ட இராஜதந்திரப் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நாட்டின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் திட்டமிடப்பட்ட ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.





