திட்வா” புயல் எதிரொலி: இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை இடைநிறுத்த 120 நிபுணர்கள் அதிரடி கோரிக்கை
“திட்வா” புயலால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் மற்றும் தோமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட பல சர்வதேச வல்லுநர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையின் உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கடன் மறுசீரமைப்புத் திட்டம் போதுமானதல்ல என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க புதிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த அவசர நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்கனவே 206 மில்லியன் டொலர் அவசரகால நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





