இந்தியாவில் திறக்கப்படும் பிரித்தானியாவின் கிளைப் பல்கலைக்கழகங்கள்!
வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் பிரித்தானிய பிரதமர்களுக்கு இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இதன்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, முக்கியமான கனிமங்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-இங்கிலாந்து கூட்டாண்மை உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கியமான அடித்தளமாக மாறி வருவதாக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் இராணுவ பயிற்சி ஒத்துழைப்பு குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பிரித்தானியாவை தளமாக கொண்ட 09 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தனது கிளையை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை மேலும் 34 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் என்றும், இந்தியாவிற்கான ஏற்றுமதியை கிட்டத்தட்ட 60% அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





