ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல்தாரிகளில் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மற்றொரு நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார்.
சந்தேக நபர்களின் பெயர்களை காவல்துறையினர் வெளியிடவில்லை, ஆனால் தேசிய ஒளிபரப்பாளரான ஏபிசி மற்றும் பிற ஊடகங்கள் அவர்களை சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் என அடையாளம் கண்டுள்ளன.
துப்பாக்கிதாரிகளின் வாகனத்தில் இஸ்லாமிய அரசின் இரண்டு கொடிகள் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் இந்த விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை.
முதலாவது சந்தேக நபர் 2015 முதல் துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததாகவும், ஆறு பதிவு செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சட்டங்களை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கும் என அந்நாட்டு பிரதமர் அல்பானீஸ் (Albanese) தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சட்டங்களை வலுப்படுத்தவும், துப்பாக்கி உரிமங்களால் அனுமதிக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை, செல்லுப்படியாகும் காலம் ஆகியவற்றை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.