ஜப்பானிடமிருந்து 11 அதிநவீன போர்க்கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா முடிவு

ஆஸ்திரேலியா தனது கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக 11 அதிநவீன போர்க் கப்பல்களை வாங்குகிறது.அந்தக் கப்பல்களை ஜப்பானிடமிருந்து ஆஸ்திரேலியா வாங்குகிறது.
புதிய கப்பல்கள் தொடர்பாக ஆஸ்திரேலியப் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) தெரிவித்தார்.
சீனாவிடமிருந்து நெருக்கடி அதிகரித்தால் அதைத் தடுக்கும் விதமாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணி 2023ஆம் ஆண்டு முதலே ஆஸ்திரேலியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியா தன்னிடம் 26 அதிநவீன போர்க் கப்பல்கள் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் தொடர்பான ஒப்பந்தம் 6 பில்லியன் அமெரிக்க டாலர் (S$7.7 பில்லியன்) என்று கூறப்படுகிறது.
ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்டிரிஸ் இந்தப் போர்க் கப்பல்களை தயாரிக்கிறது.
“ஆஸ்திரேலியாவின் கடல் பாதுகாப்பை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது. ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கமான உறவு உள்ளது,” என்று அமைச்சர் மார்ல்ஸ் தெரிவித்தார்.