புகலிடக் கோரிக்கையாளர்கள் விவகாரம் – 03 ஆப்பிரிக்க நாடுகளை எச்சரித்த பிரித்தானியா!
நமீபியா, அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு மீது விசா தடைகளை விதிக்கப்போவதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நாடுகள் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்க மறுத்திருந்த நிலையில் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இதனையடுத்து குறித்த நாடுகள் புலம்பெயர்ந்தோரை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய குற்றவாளிகள், புகலிடம் கோரத் தவறியவர்கள் மற்றும் விசா காலாவதியாகி தங்கியிருப்பவர்களைத் திரும்பப் பெறுவதில் இங்கிலாந்துடன் ஒத்துழைக்க மேற்படி மூன்று ஆப்பிரிக்க நாடுகளும் இப்போது ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் காரணமாக இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட குடியேறிகள் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படலாம் என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மஹ்மூத், “வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் குடிமக்கள் திரும்புவதை ஏற்க மறுத்தால், அவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இங்கிலாந்தில் இருக்க உரிமை இல்லாத 58,500 வெளிநாட்டு குற்றவாளிகள் மற்றும் குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





