தூதுவர் பதவி நீக்கம் – மண்டேல்சன் சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என அழுத்தம்
அமெரிக்காவுக்கான தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லோர்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம், எப்ஸ்டீன் தொடர்பான அண்மைய வெளிப்பாடுகளுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், குழந்தை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் காரணமாக, பணியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதிய ஆவணங்கள், அவர் அமைச்சராக இருந்தபோது எப்ஸ்டீனுக்கு தகவல்களை கசியவிட்டிருக்கலாம் என்பதைக் காட்டியதால், வெஸ்ட்மின்ஸ்டரில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அணியினர், மண்டேல்சன் பெற்ற பணத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
வரி மற்றும் கழிவுகளுக்கு முன், அவர் சுமார் £38,750 முதல் £55,000 வரை பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக, வெளியுறவு அலுவலகம் புதிய தகவல்களின் அடிப்படையில் மீளாய்வு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,சம்பள விபரங்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட உள்ளன.
இதனிடையே, மண்டேல்சன் தனது அரசுப் பதவியில் இருந்த காலத்தில் தவறான நடத்தை நடந்ததா என்பதை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். லண்டன் மற்றும் வில்ட்ஷயரில் உள்ள அவரது வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த விசாரணை சிக்கலானது என்றும், அதிக அளவு ஆதாரங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





