ஒரே போட்டியில் 4 சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா தனது 2-வது டி20 சதத்தை அடித்தார்.
இந்த போட்டியில், அபிஷேக் சர்மா, ரன் மெஷின்கள் என்று அழைக்கப்படும் கெயில், ரோகித் சர்மா கூட செய்யாத அளவில், ஒரே போட்டியில் 4 சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். இதில் சாம்சன் 16 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து, திலக் வர்மா களம் இறங்கினார்.
அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 17 பந்துகளில் அரைசதம் அடித்தார் தொடர்ந்து அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இது அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த 2-வது சதம் ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் வீரர்களில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டேவிட் மில்லரின் 35 பந்துகளில் மிக வேகமாக சதம் அடித்து படைத்த சாதனையை அபிஷேக் சர்மா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நூலிழையில் தவறவிட்டார். இருப்பினும், அபிஷேக் சர்மா மிக வேகமாக சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இருப்பினும், அபிஷேக் சர்மா பல சாதனைகளைப் படைத்தார். 11வது ஓவரின் முதல் பந்திலேயே அவர் தனது சதத்தை நிறைவு செய்தார். இது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா படைத்த சாதனை ஆகும். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 10.2 ஓவர்களில் சதம் அடித்து இந்த சாதனையை எட்டியிருந்தார்.
இந்த போட்டியில், தொடர்ந்து சிக்சர்களாக அடித்த அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சுப்மன் கில் 126 ரன்கள் (நாட் அவுட்) எடுத்ததே சாதனையாக இருந்தது.
அதேபோல் சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்சர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்சர்களுடன் உள்ளனர்.
இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.