இலங்கையில் தனது மகனை கொலை செய்ய முயன்ற தந்தையால் பரபரப்பு!

தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்றதாகக் கூறப்படும் தந்தையொருவரை ஆரச்சிகட்டுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அங்குச் சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தை கைவிட்டு வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார். அவர் வெளியேறும் போது, அவரது மகனுக்கு நான்கு வயதுதான் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர், ஆயுதத்துடன், சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.