பிரெக்ஸிட் தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்த ஸ்டாமர்!
முந்தைய அரசாங்கத்தின் ‘தவறான’ பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த ஸ்டாமர், உணவு மற்றும் விவசாயம் உட்பட புதிய ஏற்பாடுகளில் தொழிற்கட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய நடவடிக்கைகள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைக்க உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வரவிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன் இணைந்து, பாதுகாப்புத் துறையில் ஐரோப்பாவுடன் நெருக்கமான ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய-இங்கிலாந்து கூட்டாண்மை கவுன்சிலின் கூட்டம் வரும் வாரம் இடம்பெறவுள்ளதையும் ஸ்டாமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய €150 பில்லியன் (£130 பில்லியன்) பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பிலும் ஸ்டாமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டனின் பங்கேற்பு குறித்த பேச்சுவார்த்தைகள் முறிந்ததாகவும், நுழைவு விலை மிக அதிகமாகக் கருதப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
செலவை வலியுறுத்தியதற்கு பிரான்ஸ் பொறுப்பேற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் பிரான்ஸ் அதிகாரிகள் இதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





