சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்கே கிவுல் ஓயா திட்டம் – போராட்ட களத்தில் சுமந்திரன் ஆதங்கம்
தமிழ் பிரதேசம் முழுவதையும் நீருக்குள் அமிழ்த்தி அதிலிருந்து வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வுவுனியா , நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக இன்று (02) முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பல தசாப்தங்களுக்கு முன்னராகவே தயாரிக்கப்பட்ட இனப்பரம்பலை மாற்றுகின்ற இந்த திட்டம் இப்பொழுது நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் வடக்கிலும் கிழக்கிலும் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் வெவ்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கல்லோயா திட்டத்திலிருந்து கிழக்கின் இனப்பரம்பல் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவ்வாறு நகர்ந்து வந்து முல்லைத்தீவு, வவுனியா வடக்கு போன்ற பிரதேசங்களிலும் இனப்பரம்பலை மாற்றுகின்ற திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. மணலாறு வெலிஓயாவாக மாற்றப்பட்டதைப் போன்று பல இடங்கள் மாற்றப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
குறிப்பாக புதிய குடியிருப்பாளர்களையும் அப்பிரதேசங்களில் குடியேற்றவுள்ளதாக அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களில் 100 வீதமாக சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களை அங்கே குடியேற்றுவார்கள் என்பது முற்றுமுழுதாக சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.
இனப்பரம்பலை மாற்றுகின்ற எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகத் தெளிவாக எழுத்திலே சொல்லியிருக்கின்ற நிலையில் தற்போது இதற்கு உத்தியோகபூர்வ அனுமதியைக் கொடுத்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.





