தமிழக காங்கிரஸ் கூட்டணி விவகாரம்: ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவெடுக்க அக்கட்சியின் தலைமை தயாராகி வருகிறது.
இது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக காங்கிரஸின் ஒரு தரப்பினர் நீண்டகால கூட்டாளியான திமுகவுடன் தொடர விருப்பம் தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
குறிப்பாக, இம்முறை ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு உரிய பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தரப்பு வலுவாக முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்புக்கு பின்னரே, தமிழகத்தில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் இந்த நகர்வை திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்புமே கூர்ந்து கவனித்து வருகின்றன.





