பேரிடர் தடுப்பு முகாமைத்துவம்: தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் பச்சைக்கொடி!
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரேமி லெம்பெர்ட், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
இயற்கை அனர்த்தம் மற்றும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
முக்கிய காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் தனது உறுதியான அர்ப்பணிப்பை தொடர்வதாக பிரான்ஸ் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
உடனடி மனிதாபிமான உதவியாக, மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 1,000 அவசர நிவாரணப் பொதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்பதை தூதுவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரான்ஸ் இராணுவ அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வார்.
நிலைமைகளை மதிப்பீடு செய்யவும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் அவர் கலந்துரையாடுவார் எனவும் தூதுவர் கூறினார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் , தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம மற்றும் வானிலைத் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவ முனைவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பிரான்ஸ் பாதுகாப்பு ஆலோசகர், பிராந்திய சிவில் பாதுகாப்பு இணைப்பாளர் உள்ளிட்ட பிரான்ஸ் தூதரகத்தின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





