பஹல்காம் திருப்புமுனை: கொலையாளிகள் பாகிஸ்தானியர்கள்,லஷ்கர் உறுப்பினர்கள் – NIA உறுதி

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு முன்பாக மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்குத் தெரிந்தே அடைக்கலம் கொடுத்து உதவிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் என்றும் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்றும் என்ஐஏ உறுதி செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின்கீழ் பஹல்காமின் பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அகமது, ஹில்பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை கைது செய்யப்பட்டவர்கள் உறுதி செய்துள்ளனர்.
“பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் அவர்கள் தெரிந்தே அடைக்கலம் கொடுத்துள்ளனர்.“உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளையும் அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.