ஒரே நபரின் விந்தணுவால் பிறந்த 67 குழந்தைகள் ;10 குழந்தைகளுக்கு அரியவகை புற்றுநோய் பாதிப்பு

ஐரோப்பாவைச் சேர்ந்த நபர் ஒருவர் விந்தணு தானம் செய்துள்ளார். அதன்மூலம் 67 குழந்தைகள் பிறக்க வைக்கப்பட்டுள்ளன. அவருடைய விந்தணு மூலம் கடந்த 2008 ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மொத்தம் 67 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், தற்போது 10 குழந்தைகளுக்கு அரியவகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் இந்த விவகாரம் வெளியே தெரியாத நிலையில், இரு குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், அதற்கு மரபணு திரிபே காரணம் என தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் தனித்தனியே விந்தணு மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது, அந்த விந்தணு மையத்தினர், 2008ஆம் ஆண்டு விந்தணு பெறப்பட்டபோது இப்படியான மரபணு திரிபு கண்டறியப்படவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, எட்டு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 46 குடும்பங்களைச் சேர்ந்த 67 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டனர். இந்த மாறுபாடு 23 குழந்தைகளில் கண்டறியப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கேன்சர் செல்களான லுகேமியா மற்றும் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா பாதிப்பு வழக்குகளும் அடங்கும். ஒவ்வொரு நன்கொடையாளருக்கும் மிகவும் அரிதான பிறழ்வுகள் உள்ளதா என சோதிக்கப்படுவதில்லை என்பதால், ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என்ற வரம்பு கூட மரபணு நோய் அசாதாரணமாக பரவுவதற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
இதுகுறித்து ஐரோப்பிய விந்து வங்கி “நன்கொடை அளிக்கப்பட்டபோது இந்த அரிய மாறுபாடு புற்றுநோயுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை. மேலும் நிலையான ஸ்கிரீனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி அதைக் கண்டறிவது சாத்தியமல்ல. ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்களில் சிலவற்றில் TP53 எனப்படும் மரபணு மாறுபாடு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஒரு டோனரின் விந்தணுவை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளை உருவாக்க மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற விந்து வங்கியின் விதி மீறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட டோனாரின் விந்தணுக்களைப் பெற்ற அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.TP53 மாறுபாட்டைக் கொண்ட குழந்தைகள் தீவிரமான, நீண்டகால மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்