நாடு முழுவதும் 2500இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒவ்வொரு தலைமையக தலைமை ஆய்வாளர் அல்லது அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடுவார்கள்.
மேலும் இது அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும் என்று கூறினார்.
பொது பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைத்துப் பகுதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் காவல்துறை மற்றும் முப்படையினருக்கு ஆதரவளிக்கவும் வழிகாட்டவும் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், தனிநபர்கள் அல்லது பொருட்களை அருகிலுள்ள காவல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
“இந்த பண்டிகை காலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை காவல்துறை 2,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினரை பணியில் அமர்த்தியுள்ளது.
சில அதிகாரிகள் சிவில் உடையில் இருப்பார்கள், அத்துடன் இந்த பண்டிகை காலத்தில் உளவுத்துறை அதிகாரிகளும் உங்களைச் சுற்றி இருப்பார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.





