கல்பிட்டியில் போதைப்பொருள் கும்பல் சிக்கியது!
இலங்கை கடற்படையினர் கல்பிட்டியின் இப்பாந்தீவு கடல் பகுதியில் 2025 டிசம்பர் 05 அன்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று (03) பைகளை ஏற்றிச் சென்ற ஒரு படகையும், அதற்கு உதவ வந்த மற்றொரு படகையும், அத்துடன் நான்கு (04) சந்தேக நபர்களையும் கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர் .

.
இன்று காலை (டிசம்பர் 06) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நிபுணர் பரிசோதனையில், அந்த மூன்று பைகளில் 63 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் (Crystal Methamphetamine) மற்றும் 14 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சனா பனகொட (Vice Admiral Kanchana Banagoda)மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய (Inspector General of Police Priyantha Weerasuriya) ஆகியோர் கலந்துகொண்டனர்.

“ஒன்றுபட்ட தேசம்” (A Nation United) தேசிய பணியின் கீழ் போதைப்பொருள் கடத்தலுக்கு எந்த வழியும் இல்லை என்று கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் முப்படைகளும் மற்றும் காவல்துறையினரும் சேர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் கடத்தல்காரர்கள் தங்கள் முயற்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய அனர்த்தத்திற்குப் பின்னர் முப்படைகளும் பொலிஸாரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது என்றும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது பொதுமக்களின் கடமை என்றும், கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை பற்றி சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊடகங்களின் பங்கையும் கடற்படைத் தளபதி பாராட்டினார்.
கைப்பற்றப்பட்ட படகுகள், போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.






