Site icon Tamil News

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் மற்றுமொரு நபரையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ்காரர் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவின் மிரிஹான உப பிரிவின் அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 74 கிராம் ‘ஐஸ் போதைப்பொருள் (Crystal methamphetamine), போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

காரில் பயணித்த சந்தேகநபர் பிடகோட்டே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 64 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பிடகோட்டே பிரதேசத்தில் டெய்சி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போதைப்பொருளை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் ஒருங்கிணைப்புடன் மாத்தறை வெலிகம பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் ஊடாக போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். .

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version