யாழில் சர்ச்சை: 36 கோடி நிவாரண நிதி செயலாளர் அதிரடி நடவடிக்கை
வெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவருக்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய அரச அதிகாரிகளே பொறுப்பு என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் கிராம அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25, 000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால், பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய பேரனர்த்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வீடடை வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், துப்பரவுப்பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 25 ஆயிரம் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
அந்த வகையில், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய 05ஆம் திகதி கடிதத்தில் முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், அனைத்திட்கும் உதவித்தொகையினை பெறுவதற்கு தகுதியானது என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தருக்கு சரியான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது பிரதேச செயலரின் கடமையாகும்.
இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து கிராம மட்ட அலுவலர்களும் நேரடியாக பிரிவிற்கு சென்று தரவுகளை பெற்றுக்கொள்வதனை பிரதேச செயலர் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
படிவத்தினை உரிய முறையில் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலினை தயார் செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன், என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





