ரஷ்யா, உக்ரைன் போர் – அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தெரிவதாக செலென்ஸ்கி அறிவிப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்காவின் ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் ஜேரட் குஷ்னர் ஆகியோருடன் நடந்த ஒரு மணி நேர தொலைபேசி உரையாடல் “அமைதியை விரைவில் கொண்டுவர புதிய யோசனைகளை வழங்கியது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் இணைந்து 20 அம்சங்களைக் கொண்ட புதிய அமைதி திட்டத்தை தயாரித்துள்ளன.
இந்த திட்டத்தில், கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் விலகி, அங்கு ஆயுதமற்ற பாதுகாப்பு மண்டலம் அமைப்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் தாக்கினால், அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனெஸ்க் பகுதியில் “சுதந்திர பொருளாதார மண்டலம்” அமைப்பதும் ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தற்போது அந்த பகுதியில் பெரும்பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும், உக்ரைன் எந்த நிலப்பகுதியையும் முழுமையாக ஒப்படைக்க மறுத்து வருகிறது.
இதேவேளை, அமெரிக்கா ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரஷ்யா, அமெரிக்க பிரதிநிதிகள் கொண்டு வந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக கிரெம்லின் தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், போர் தொடர்கிறது. உக்ரைன், ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
அதே நேரத்தில், டொனெஸ்க் பகுதியில் மேலும் சில பகுதிகளை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





