எண்ணெய் விலை உயர்வு: ஜி7 நாடுகளின் அதிரடி முடிவு!
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஜி7 (G7) நாடுகள் தங்கள் வசம் உள்ள அவசரகால எண்ணெய் இருப்புகளை (Strategic Reserves) கூட்டாக வெளியிட ஆதரவு தெரிவித்துள்ளன.
சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency) உடன் இணைந்து ஜி7 எரிசக்தி மற்றும் நிதி அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில், சுமார் 300 முதல் 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022-இல் ரஷ்யா-உக்ரைன் போரின் போது வெளியிடப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20% பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் நின்றுவிட்டதால், உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது. ஈரான் இந்தப் பாதையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ஒரு பீப்பா கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை உயர்ந்தது. தற்போது கையிருப்பு வெளியிடப்படும் என்ற செய்தியால் விலை சற்றே நிலைபெற்றுள்ளது.
பிபி நிறுவனத்தின் முன்னாள் வியூகத் தலைவர் நிக் பட்லர் பிபிசி-யிடம் கூறுகையில், “இந்த இருப்புகளை வெளியிடுவது ஒரு குறுகிய காலத் தீர்வே. ஒருமுறை பயன்படுத்திவிட்டால் அவை தீர்ந்துவிடும்,” என்று எச்சரித்துள்ளார். மேலும், எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் (Refining capacity) பற்றாக்குறை நிலவுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச எரிசக்தி முகமை (International Energy Agency) உறுப்பு நாடுகள் 90 நாட்களுக்குத் தேவையான இருப்பை வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். தற்போது இந்த இருப்புகள் வெளியிடப்படும் போது, புதிய எண்ணெய் உடனடியாகப் பாயாது. மாறாக, உற்பத்தியாளர்கள் சந்தையில் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிக கச்சா எண்ணெயை ஆர்டர் செய்ய வழிவகை செய்வார்கள்.





