நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படுமா? சஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுக்ககூடிய அத்தனை நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடுமா என அவரிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ கல்வி மறுசீரமைப்பை ஒரு வருடத்துக்கு பிற்போடுவதால் இந்த ஆட்சியின்கீழ் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடியே கல்வி மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும். இது கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஆட்சியின்கீழ் கட்சியொன்றின் நிகழ்ச்சி நிரல் அமுலாகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அனைத்து விடயங்களையும் நாம் உரிய வகையில் கையாள்வோம். 41 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்துக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்து திட்டங்களையும் முன்னெடுப்போம்.” – எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம்.
இது கொள்கை அடிப்படையிலான ஒன்றிணைவாகும். உரிய நேரத்தில், உரிய அறிவிப்பு வெளியிடப்படும்.” – என சஜித் மேலும் கூறினார்.





