மலையக மக்களின் காணி உரிமை பிரச்சினை தீர்க்கப்படுமா?
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஜீவன் தொண்டமான் மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால், வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிமுறை பிறக்கும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
“சீர்திருத்தம், வீடமைப்பு தொடர்பில் பேசப்பட்டாலும், மலையகத்தில் பெரும் பிரச்சினையொன்று உள்ளது. அதாவது தோட்டத்தில் வேலைசெய்தால்தான் அடையாளம், சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன.
தோட்டத்தில் வேலை செய்யாத ஏனையோருக்கு எவ்வித அதிகாரமும் கிடைக்கப்பெறவில்லை. இந்த முறைமை மாற வேண்டும். இது பற்றி மக்களிடம் நேரில் சென்று கேட்டறியலாம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பேரிடர் நிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை தீர்ப்பதற்கு தற்போது முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் நாம் விரிவாக பேசுவோம்.
ஒருவருக்கு 6 பேர்ச்சஸ் என வைத்தாலும் ஒன்றரை லட்சம் பேருக்கு 9 லட்சம் பேர்ச்சஸ் காணி தேவைப்படும். இதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது, தொழில்நுட்ப காரணி, பாதுகாப்பான இடம் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மலையக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளேன்.
தேசிய வேலைத்திட்டமொன்றை அமைத்து இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சிப்போம்” என்றார்.




