நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? சஜித் அணிமீது சபையில் சாட்டையடி!
“பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவுக்கு Dr. Harani Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பதை எதிரணி அறிவிக்க வேண்டும்.”
இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
“ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டுவதாக செய்திகள் வெளியாகின.
குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தால் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அது தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு நாம் தயார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டிவிட்டு, அதனை சமர்ப்பிக்காமல் இருப்பது பாரதூரமான பிரச்சினையாகும்.” எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா அல்லது இல்லையா என்பதை எதிரணி தெளிவுபடுத்த வேண்டும்.
ஏனெனில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கு அவர்களின் நிலைப்பாடு முக்கியமாகும்.” என அமைச்சர் மேலும் கூறினார்.
இதற்கு எதிரணி தரப்பில் நேரடி பதில் வழங்கப்படவில்லை. உரிய நேரத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே எதிரணி பிரதம கொறடாவால் குறிப்பிடப்பட்டது.





