மாகாணசபைத் தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார்.
எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது என்பது குறித்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இவ்வாரம் கூடவுள்ளது.
மேற்படி குழுவின் தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சிறியதொரு சட்டத்திருத்தமே தேவைப்படுகின்றது என எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கிலேயே எல்லை நிர்ணயம் பற்றி ஆளுந்தரப்பு கதைத்துவருகின்றது எனவும் மேற்படி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.




