பயங்கரவாத சட்டத்துக்கு பதிலாக வரவுள்ள புதிய சட்டத்தின் ஏற்பாடுகள் எவை?
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரியவருகின்றது.
சண்டேடைம்ஸ் வார இதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது.
இச்சட்டத்தை நீக்குமாறு அனைத்துலக சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
இந்நிலையில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டவரைவு, “வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ, பயங்கரவாத நிலையைத் தூண்டும் எந்தவொரு செயலையும் பயங்கரவாத குற்றமாகக் கருதுகின்றது.
பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துபவர் , இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ
அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ எந்தவொரு செயலையும் செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ கட்டாயப்படுத்துபவர் பயங்கரவாதக் குற்றத்தைச் செய்பவராக வரையறுக்கப்பட்டுள்ளது.
போரை பரப்புபவர், அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுபவர், அல்லது இலங்கை அல்லது வேறு எந்த இறையாண்மை கொண்ட நாட்டின் இறையாண்மையை மீறுபவர், பயங்கரவாதக் குற்றத்தைச் செய்பவராக வரையறுக்கிறது.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாகவோ, பயங்கரவாத வெளியீடுகளை ஊக்குவிப்பதற்காகவோ, பரப்புவதற்காகவோ அல்லது பயிற்சி அளித்ததற்காகவோ குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
சந்தேக நபர்களை ‘நியாயமான சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிடவும்’ சந்தேக நபர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்யவும் இராணுவத்தினருக்கு அதிகாரம் உள்ளது.
ஒரு சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டவுடன், கைது குறித்து 24 மணி நேரத்திற்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், காவல்துறை மா அதிபருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
காவல்துறை மா அதிபர் அல்லது பிரதி காவல்துறை மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமிருந்து இரண்டு மாதங்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவைப் பெறவும் இந்த சட்டவரைவு வழிவகுக்கிறது.
கைது செய்யப்பட்டதிலிருந்து ஓராண்டு வரை, தடுப்புக்காவல் உத்தரவை புதுப்பிக்க முடியும் என்றும் இந்த சட்டவரைவில் கூறப்பட்டுள்ளது.





