50 ஆயிரம் பேருடன் களமிறங்குவோம் – எதிரணிகளுக்கு ஜே.வி.பி சவால்
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிரணிகளால் 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமெனில், அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு எம்வசம் உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“ ஆட்சியைக் கவிழ்ப்பது பற்றியும், கொழும்பை சுற்றிவளைப்பது குறித்தும் தற்போது கதைக்கின்றனர். அவர்களின் நகர்வுகள் எமக்கு சவால் அல்ல.
எப்படி போராட்டம் நடத்த வேண்டும், எப்படி பேரணி நடத்த வேண்டும் என செய்து காட்டியவர்கள் நாம். எனவே, 3000 ,4000 பேரை திரட்டி எம்மை மிரட்ட முடியாது.
பேரணி பார்க்க வேண்டுமானால் நாமும் நடத்தி காட்டுகின்றோம். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக 5 ஆயிரம் பேரை திரட்ட முடியுமென்றால் பாதுகாப்பதற்காக 50 ஆயிரம் பேருடன் களமிறங்கும் வல்லமை எமது அரசியல் அணிக்கு உள்ளது. எனவே, எம்முடன் விளையாட வரவேண்டாம்.” எனவும் ஜே.வி.பி. செயலாளர் குறிப்பிட்டார்.




