சதி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை – கோபமடைந்த கனிமொழி எம்.பி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
நெரிசலில் 40 பேர் உயிரிழந்து, 111 பேர் படுகாயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காயமடைந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துவிட்டு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“விஜய் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்தது நீங்காத வடுவாக உள்ளது. இதில் சதி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யார் கட்சி என்பது முக்கியமில்லை, தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு முதலமைச்சரின் பொறுப்பு. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியல்ல,” என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் “கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது, காவல்துறை முன்கூட்டியே அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். இது மக்களின் பாதுகாப்புக்காகவே. தவெகவுக்கு காவல்துறை அப்படி எச்சரித்தது, ஆனால் இந்த துயரம் நடந்துவிட்டது. 20 பேருக்கு ஒரு காவல் அதிகாரி வீதம் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,” என்று விளக்கினார்.
கனிமொழி மேலும் கூறுகையில், “எந்தக் கட்சியாக இருந்தாலும், விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஆளும் திமுகவின் முப்பெரும் விழாவுக்கு கூட கரூரில் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. தவெகவின் இந்த கூட்டத்திற்கும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கட்சிகள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.





