உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புதின் ‘நெருப்போடு விளையாடுகிறார்’: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் புட்டின் நெருப்போடு விளையாடுகிறார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரேன் அமைதி பேச்சில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் டிரம்ப்பின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.கிரெம்ளின் தலைவரை ‘பித்துப்பிடித்தவர்’ என்று அண்மையில் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
கடந்த வாரம் உக்ரேன் மீது ரஷ்யா சரமாரியாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து மாஸ்கோ மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
“நான் மட்டும் இல்லையென்றால், ரஷ்யாவிற்கு நிறைய மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை விளாடிமிர் புட்டின் உணரவில்லை,” என்று திரு. டிரம்ப் மே 27 அன்று தனது டுருத் சோஷியல் சமூகப் பதிவில் தெரிவித்திருந்தார்.“அவர், நெருப்போடு விளையாடுகிறார்,” என்றார் டிரம்ப்.ஆனால் ரஷ்யாமீது எத்தகைய மோசமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை டிரம்ப் விவரிக்கவில்லை.
இவ்வார இறுதியில் ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகளை விதிப்பது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வால் ஸ்திரீட், சிஎன்என் ஆகிய இரு ஊடகங்களும் தெரிவித்துள்ளன.இவ்விவாகரத்தில் அவர் தனது மனதை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது என்றும் அவை கூறியுள்ளன.
மே 25ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மாஸ்கோவுக்கு தடை விதிப்பதை உண்மையாகவே பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தார்.
டிரம்ப், புட்டினை கடுமையாக விமர்சிப்பது அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது. இதற்கு முன்பு புட்டினை அவர் மதிப்புடன் குறிப்பிட்டு வந்தார்.
குறிப்பாக வாரயிறுதியில் உக்ரேன்மீது ரஷ்யா பல நூறு டிரோன்களைக் கொண்டு தாக்கியதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதால் டிரம்ப் வெறுப்படைந்தார்.
“ரஷ்ய அதிபர் புட்டினுடன் எப்போதும் எனக்கு நல்லுறவு இருக்கும். ஆனால் அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. பித்துப்பிடித்தவர்போல நடக்கிறார்,” என்று மே 25ஆம் டுருத் சோஷியல் பதிவில் டிரம்ப் கூறியிருந்தார்.