ஈரானில் அமெரிக்கா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பேரழிவை ஏற்படுத்தும் ; ரஷ்யா

ஈரானில் அமெரிக்கா அணுவாயுதங்களைப் பயன்படுத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று கிரெம்ளின் மாளிகைப் பேச்சாளர் மிட்ரி பெஸ்கோவ் கூறியதாக ரஷ்ய அரசாங்கச் செய்தி நிறுவனமான டாஸ் (TASS) தெரிவித்துள்ளது.
அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பதாக ஊடகங்களில் வெளியான ஊகச் செய்திகளின் தொடர்பில் பெஸ்கோவ் கருத்துக் கூறியிருந்தார்.இருப்பினும், எந்த ஓர் ஊடகத்தைப் பற்றியும் அவர் தெரிவிக்கவில்லை.
ஈரானின் ஃபொர்டோவ் சுரங்க யுரேனியச் செறிவூட்டல் தளத்தை முற்றிலுமாக தகர்க்க வழக்கமான வெடிகுண்டுகள் மட்டும் போதாது என்று அமெரிக்கத் தற்காப்பு அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக்கொணடதாக ‘த கார்டியன்’ செய்தித்தாள் குறிப்பிட்டு இருந்தது.
அந்தத் தளத்தை அழித்து ஒழிப்பதற்கான ஆரம்பகட்ட தாக்குதல்களுக்கு வெடிகுண்டுகள் தேவைப்படும் என்றும் அதன் பின்னர் பி-52 குண்டுவீச்சு விமானத்தில் இருந்து அணுவாயுதத்தை வீச வேண்டி இருக்கும் என்றும் அதிகாரிகள் கருத்துகளைப் பரிமாறியதாக அந்த செய்தித்தாள் கூறியிருந்தது.
இருப்பினும், ஃபொர்டோவில் அணுவாயுதத்தைப் பயன்படுத்துவது குறித்து அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிசீலிக்கவில்லை என்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை தற்காப்பு அமைச்சரும் ராணுவத் தளபதியும் வெள்ளை மாளிகைக் கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என்றும் அந்த பிரிட்டிஷ் செய்தித்தாள் குறிப்பிட்டு உள்ளது.