இந்தியாவை அடுத்து சீனா மீது குறி வைக்கும் அமெரிக்க ஜனாதிபதி

இந்தியாவை அடுத்து சீனா மீதும் தனது நிர்வாகம் தடைகளை விதிக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக வரிகளை டிரம்ப் விதித்து வருகிறார்.
இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போது இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்போது அடுத்தப்படியாக, ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா மீது டிரம்ப் கவனம் சென்று உள்ளது.
சீனா மீது வரிகளை விதிப்பது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார். இது தொடர்பாக, நிருபர்கள் சந்திப்பில் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ”நடக்கக்கூடும். நாம் எப்படி செய்கிறோம் என்பதை பொறுத்தது. அது நடக்கலாம். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக சீனா மீது தனது நிர்வாகம் தடைகளை விதிக்க முடியும்” என டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியா மீதான அதிக வரி விதிப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”8 மணி நேரம்தான் ஆகிறது. அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீங்கள் இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள். இரண்டாம் கட்ட, தடைகளை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்’ என டிரம்ப் பதில் அளித்தார்.