என்.பி.பி. ஆட்சியில் ஊடகச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: ஐதேக கடும் சீற்றம்!
ஊடகச்சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இடமளிக்காது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தனியார் தொலைக்காட்சியொன்றை இலக்கு வைத்து, அதன் உரிமத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஊடகங்களுக்கு சுதந்திரமளிக்கும் வகையில் (media freedom) ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில்தான் தேவையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டத்தைக்கூட (RTI) ரணில் விக்கிரமசிங்கவே கொண்டுவந்தார்.
மக்கள், அரசியல் பிரமுகர்கள் தவறிழைப்பது இயல்பு. ஆனால் அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ள முற்பட வேண்டும். மாறாக ஊடகங்களை ஒடுக்குவதற்கு முற்படக்கூடாது.
எனவே, ஊடகங்களை அச்சுறுத்துவது பாரதூரமான விடயமாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது.” – என்றார் வஜிர அபேவர்தன.





