நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஐ.தே.க. வலியுறுத்து!
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் இயலுமை தமக்கு இல்லையென அரசு கருதினால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலுக்கு செல்வதே சிறந்த தேர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சி UNP தெரிவித்துள்ளது.
காலியிலுள்ள ஐ.தே.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன Vajira Abeywardena மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ நாடொன்றுக்கு வெளிநாட்டு கொள்கையென்பது மிக முக்கியமாகும். நாட்டின் கொள்கையை சர்வதேசத்துக்கு வெளிவிவகாரக் கொள்கையே எடுத்துரைக்கும். எனவே, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அதில் மாற்றம் செய்யக்கூடாது.
ரணில் விக்கிரமசிங்கவே இந்நாட்டிலுள்ள அனுபவம்மிக்க தலைவர். எனினும், துரதிஷ்டவசமாக மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.
எனவே, தற்போதுள்ள நிலையில் நாட்டின் நிலைமையை முகாமைத்துவம் செய்வது கடினமாகும். அதனால் மக்கள் பாதிக்கப்படுவதை தவிர வேறு எதுவும் இடம்பெறப்போவதில்லை. நாடு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய மக்கள் சக்தியினரால் முடியாது.
எதிரணியில் இருக்கும்போது தாம் கூறிய விடயங்களை தேசிய மக்கள் சக்தி தற்போது மறந்து செயல்படுகின்றது. அதாவது அவர்களால் ஆள முடியவில்லை அல்லது தெரியவில்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது.
ஆகவே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும்.” எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.




