சிறையில் உள்ள இம்ரான் கானின் மனைவி குறித்து ஐ.நா நிபுணர் கவலை
பாகிஸ்தான்(Pakistan) முன்னாள் பிரதமரின் மனைவி புஷ்ரா பீபி கானின்(Bushra Bibi Khan) தடுப்புக்காவல் சித்திரவதை என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்(Imran Khan) மனைவி புஷ்ரா பீபி கான், அவரது உடல் மற்றும் மன ஒருமைப்பாட்டிற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நிபுணர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புஷ்ரா பீபி கானின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மனித கண்ணியத்திற்கு ஏற்ற தடுப்புக்காவல் நிலைமைகளை உறுதி செய்யவும் அரசுக்கு கடமை உள்ளது” என்று சித்திரவதை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ்(Alice Jill Edwards) குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலக அறிக்கையின்படி, அடியாலா(Adiala) சிறையில் உள்ள புஷ்ரா பீபி கான் ஒரு சிறிய, காற்று இல்லாத அறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரது அறையில் மின்வெட்டு அடிக்கடி இடம்பெறுகிறது. அவருக்கு அசுத்தமான குடிநீர் மற்றும் அதிகப்படியான மிளகாய் தூள் காரணமாக சாப்பிட முடியாத உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





