காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுக்காவல் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சோஃபியான் மாவட்டத்தில் பஸ்குச்சான் என்ற பகுதியில் நடைபெற்ற அதிரடி சோதனையில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய இரு பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள், குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராணுவம் மற்றும் காவல்துறையினர் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையில் இருவரும் சிக்கி உள்ளனர். அவர்களுடன் வேறு எவரும் அதே பகுதியில் பதுங்கி உள்ளனரா என்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் 19ம் திகதி இதேபோன்ற தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் இருவர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 4 கையெறிகுண்டுகள், 43 தோட்டாக்கள் உள்ளிட்ட ஏராளமான வெடிபொருள்களும் ஆயுதங்களும் உள்ளிட்டவை பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.