வெளிநாடு ஒன்றில் இரு இலங்கையர்கள் சடலமாக மீட்பு!
தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.
மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் இருந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு கியோங்சாங் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 மற்றும் 30 வயதுடைய இரு இலங்கையர்களும் 50 வயதான கொரிய மேற்பார்வையாளர் ஒருவருமாக மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் இளம் மீன் இனப்பெருக்க பிரிவுகளுக்கு தண்ணீர் வழங்கப் பயன்படுத்தப்படும் பெரிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்பார்வையாளரின் குடும்பத்தினர் இரவு 7:38 மணிக்கு அவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுது்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் சடலங்களை மீட்டுள்ளனர். மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றார்களா அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்ற நிலையில் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





