உக்ரேனின் ட்ரோன் தாக்குதலால் மாஸ்கோவில் இரு விமான நிலையங்கள் மூடல்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரேன் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை நடத்தியதால் இரு விமான நிலையங்கள் மூடப்பட வேண்டியிருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோவை நோக்கிச் சென்ற ஒன்பது உக்ரேனிய வானூர்திகளை ரஷ்ய ஆகாயத் தற்காப்புப் பிரிவுகள் அழித்ததாக மேயர் செர்கெய் சோப்யனின் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூறினார்.
விடிய விடிய நடந்த தாக்குதல்களில் வானூர்திகளின் சிதைவுகள் விழுந்த இடங்களுக்கு அவசரகாலச் சேவை முடுக்கிவிடப்பட்டதாக அவர் சொன்னார். இதில் பொருட்சேதம் ஏற்பட்டதாக அவர் தகவல் கூறவில்லை.
வானூர்தித் தாக்குதலால் துலா பகுதியில் உள்ள அஸோட் வேதியியல் ஆலையில் சிறிது நேரம் தீ மூண்டதில் இருவர் காயமுற்றனர். கலுகா வட்டாரத்தில் ஏழு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக வட்டார ஆளுநர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விமானப் பயணப் பாதுகாப்பை உறுதிசெய்ய வினுகோவோ, டோமோடிடோவோ விமான நிலையங்களில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.