ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாக டிரம்ப் மிரட்டல்

ஈரான் அதன் அணுசக்தித் திட்டத்தைக் கைவிட இணங்காவிட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், புதன்கிழமை (ஏப்ரல் 9) மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.
ஈரான் அணுவாயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய டிரம்ப், அணுசக்தித் திட்டங்களை நிறுத்த அது மறுத்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
சில செயலாக்க உத்தரவுகளில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ராணுவ நடவடிக்கைதான் அவசியம் என்றால் அது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். இஸ்ரேல்தான் அதற்குத் தலைமை தாங்கும்,” என்றார்.ஆனால் ராணுவ நடவடிக்கை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குப் பதிலளிக்க அமெரிக்க அதிபர் மறுத்துவிட்டார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்து அமெரிக்கா அதனுடன் நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவிருப்பதாக ஏப்ரல் 7ஆம் திகதி அவர் அறிவித்தார். அது தோல்வியுற்றால் ஈரானுக்குப் பேரபாயம் நேரிடக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த சில வாரங்களாகத் டிரம்ப்பின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஈரான், ஓமானில் பிற தரப்புகளையும் ஈடுபடுத்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறுகிறது.
ஓமானிய வெளியுறவு அமைச்சர் பாதிர் அல்-பூசைடி நடுநிலையாளராகப் பங்கேற்கும் பேச்சுவார்த்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் அமெரிக்க அதிபரின் சிறப்புப் பேராளர் ஸ்டீவ் விட்கோஃபும் கலந்துரையாடுவர் என்று ஈரானிய அரசாங்கம் ஏப்ரல் 8ஆம் தேதி தெரிவித்தது.