ஐரோப்பிய நாடுகள் மீதான வரி விதிப்பை மீளப் பெற்றார் ட்ரம்ப்!
கிரீன்லாந்து விவகாரத்தில் 08 ஐரோப்பிய நாடுகள் மீது பெப்ரவரி மாதம் முதல் 10 சதவீதம் வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதனை மீளப் பெற்றுள்ளார்.
இருப்பினும் கிரீன்லாந்தை கையப்படுத்தும் முடிவை மீளவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் நிராகரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் (Davos) நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் (Mark Rutte) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் ட்ரம்ப் இட்டுள்ள பதிவில், கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பிராந்தியம் தொடர்பான எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்வு, நிறைவடைந்தால் அமெரிக்காவிற்கும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சிறந்த ஒன்றாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டே கட்டண அச்சுறுத்தலைத் திரும்பப் பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை கிரீன்லாந்து மற்றும் “கோல்டன் டோம்” ஏவுகணை கேடயம் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





