பாசிச எதிர்ப்பு ஆன்டிஃபா இயக்கத்தை ‘பயங்கரவாத’ குழுவாக அறிவித்த டிரம்ப்

“பாசிசம்” எனப்படும் பொதுவுடைமை எதிர்ப்புக் கொள்கைக்கு நேர்எதிரான “அன்டிபா” என்ற இயக்கத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பயங்கரவாத அமைப்பாக செப்டம்பர் 17 (புதன்கிழமை) வகைப்படுத்தியுள்ளார்.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கையை அதிபர் எடுத்துள்ளார்.
நாட்டின் ஆக உயரிய சட்ட நடைமுறைகளின்படி, அன்டிபா அமைப்புக்கு நிதி ஆதரவு வழங்குவோரை விசாரணை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தவிருப்பதாகவும் அவர் சமூக ஊடகமான டுரூத் சோஷியலில் பதிவிட்டார்.
அன்டிபா ஒரு முறையான தலைமையோ நிர்வாக அமைப்போ இல்லாத இயக்கம். எனவே அதிபர் டிரம்பின் முயற்சி எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெளிவாகவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
யூட்டா மாநில அரசு வழக்கறிஞர்கள், சந்தேக நபராகக் கைதுசெய்து விசாரித்துவரும் டைய்லர் ராபின்சன் மீது அதிகாரபூர்வக் கொலைக்குற்றச்சாட்டை சுமத்திய மறுநாள் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
அண்மைக் காலமாக அதிபர் டிரம்ப்பும் மூத்த அரசாங்க அதிகாரிகளும் (கொலைக்கு முன்பாகவே) இடது சாரி அமைப்புகள் பகைமையை வளர்ப்பதாகக் குறைகூறி வந்துள்ளனர். ஆகவே, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு டிரம்ப் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வன்முறை, பகை ஆகியவற்றைத் தூண்டும் நடவடிக்கைகள் குறித்து நிர்வாக உத்தரவு ஒன்றை வெள்ளை மாளிகை தயாரித்து வருவதாகவும் அரசாங்க அதிகாரியிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
இதே போன்ற யோசனையை அதிபர் டிரம்ப் 2020ல் பதவியிலிருந்தபோதும் முன்னெடுக்க முயன்றதும் தற்போது மேற்கோளாகியுள்ளது. அந்த சமயத்தில் காவல்துறையினர் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை கொலைசெய்ததால் நாடுதழுவிய போராட்டங்கள் வெடித்தன