திரிணாமூல் காங்கிரஸின் மகா காட்டாட்சி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த மகா காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிங்கூரில் ரூ.830 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவியது பாஜக அரசு.
அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரு தீவுக்கு நேதாஜியின் பெயரை சூட்டியது பாஜக அரசு.
டெல்லியில் பாஜக அரசை நீங்கள் தேர்ந்தெடுத்ததால், வங்க மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. துர்கா பூஜைக்கு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது.
ஆனால், அவர்கள் இதைச் செய்யவில்லை. நான் செய்ததற்கு, மேற்கு வங்கத்தின் மீதும், இங்குள்ள மக்கள் மீதும் எனக்குள்ள அன்பே காரணம்” என்றார்.





